என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Friday, October 16, 2009

தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!!!






புத்தாடை அணிந்து
புது உற்சாகம் பிறந்து
இனிமையாய் பிறக்கட்டும் இத்தீபாவளி!

தாய் தந்தை ஆசிர்வாதத்தோடு
உடன் பிறந்தோரின் அன்போடு
தோழர்களின் உள்ளத்து வாழ்த்தோடு
செம்மையாய் சிறக்கட்டும் இத்தீபாவளி!

பலகார உணவின் சுவையோடு
பட்டாசு வெடியின் சத்தத்தோடு
வீட்டை சுற்றி அகல்விளக்கோடு
மேன்மையாய் இருக்கட்டும் இத்தீபாவளி!

அநியாய அசுரன் அழிந்த தினத்தில்
நாமும் நமக்குள் வாழும்
அசுர குணங்களை அழிக்கலாமே!

வெடிச்சத்தம் கேட்க தீபாவளி இருக்க
அமைதி ஏன் முகவரி இழக்கிறது
மற்ற நாட்களில்?

உலகை பற்றி
அறிந்து அறியாமல் இருக்கிறோமா?
இல்லை
அறியாமல் இருப்பதை அறிந்துவிட்டோமா?

தீண்டாமையை ஒற்றுமை எனும் தீ
கொளுத்தப்போவது எப்போது?
வன்முறையை மனிதநேயம் வெல்ல
எவ்விடத்தில் அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது?

தீவிரவாதத்தை அன்பு
மிஞ்ச முடியாமற் போனதற் காரணம்?

அத்துணைக்கும் பதில் நம்மிடத்தே உண்டு!

நொடிகளும் நொடிக்கொருமுறை
கடந்து விடுவதால்
இறந்த காலம் இறந்து போகட்டும்!

இன்றைய புத்தாடையுடன்
புதுமனிதனாய் நாம் பிறந்திட
இனி வரும் காலங்களில்
நற்சிந்தனைகள் நம் மனதில் வளரட்டும்;

முயற்சியை துணையாய் கொள்வோம்
அன்பினால் உலகை இணைப்போம்
விதியின் சதியை மதியால் வெல்வோம்
மனிதனாய் சிலநாள் உலகினில் வாழ்வோம்;

எத்திசையில் வாழும் என் தோழர்கள்
அவரின் எண்ணத்துடன் இன்பமாய் வாழ்ந்திட
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கும்
இந்த கவித்தோழனின்
தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Thursday, September 24, 2009

பெரியோர் செப்பு மொழிகள் ( பாகம் - 2 )

01. சோதனையின் போதும் சவாலான தருணங்களிலும் ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை வைத்துத்தான் ஒரு மனிதனை துல்லியமாக மதிப்பிட முடியும் -மார்டின் லூதர் கிங்

02. எதைச் செய்யக்கூடாதோ அதை திறம்படச் செய்வது போல வெட்டிவேலை உலகில் எதுவும் கிடையாது - பீட்டர் டிராக்டர்

03. உங்களது நாட்கள், உங்களது வாழ்க்கையின் சிறிய வடிவங்கள், இன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. - கார்ல் மார்க்ஸ்

04. அதிகமான வேலை செய்வதென்பது சரியான வேலையைச் செய்வதற்கு இணையாகாது - ஸ்டீபன் ஆர். கோவி.

05. யார் வேண்டுமானாலும் கோபம் அடையலாம், அது மிகச் சுலபம். சரியான நபரிடம், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான காரணத்துக்காக, சரியான முறையில் கோபப்படுவதற்கு எல்லோராலும் முடியாது. அது சுலபமான காரியமும் அல்ல.
- அரிஸ்டாட்டில்

06. என்னிடமுள்ள சிறந்த அம்சங்களை வெளிக்கொண்டு வருபவனே எனது சிறந்த நண்பன் - கென்றி போட்.
07. மனித குலத்தை ஆட்சி செய்வது அதன் கற்பனைத் திறன்தான்
- நெப்போலியன் பொனபாட்.
08. நமது முக்கியமான பிரச்சனையை தீர்க்கும்போது ஓர் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். அந்தப் பிரச்சனையை உருவாக்கிய அதே பழைய சிந்தனை மட்டத்தால் அந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது. - அல்பார்ட் ஐன்ஸ்டைன்.
09. இதுவரை நான் படித்திராத விடயங்களை உள்ளடக்கிய நல்ல புத்தகத்தை என்னிடம் தருபவனே எனது சிறந்த நண்பன் - அபிரகாம் லிங்கன்.
10. நம்பிக்கைதான் யதார்த்தத்தைப் படைக்கிறது. - வில்லியம் ஜேம்ஸ்


11. பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். ஆனால் விட்டு ஓடாதே, இப்பொழுது சிரமப்படு, பின் வாழ்நாள் முழுவதும் சாம்பியனாக வாழலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் உலக சாம்பியன் ஆனேன் - குத்துச்சண்டை வீரர் முகமது அலி.
12. தொடர்ச்சியான ஈடுபாடு, கடின உழைப்பு, விடாமுயற்சி, இந்த மூன்றும்தான் சாதனையாளரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. - தாமஸ் கார்லைஸ்.
13. வாழ்க்கையில் தோல்வி கண்டவர்களில் ஏராளமானவர்கள் வெற்றியை நெருங்கிவிட்டதை அறியாமல் தமது முயற்சிகளைக் கைவிட்டவர்களே. - தாமஸ் எடிசன்.
14. சிலர் நம்மை சுற்றியிருப்பவர்கள் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தால் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். இன்னும் சிலர் நரகமே வந்து தடுத்தாலும் கூட உடைத்தெறிந்து வெற்றி பெறுகிறார்கள். இந்த இரண்டு பிரிவுகளில் நீங்கள் எதில் இடம் பெறப் போகிறீர்கள் ? - நெப்போலியன் கில்.
15. நமது சிந்தனைகளை நமது உணர்ச்சி பூர்வமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதுதான் மனித நாகரிகத்தின் உயர்ந்த கட்டம். - சார்லஸ் டார்வின்.

16. வெற்றி பெற விடா முயற்சிதான் மிகமிக அவசியமானது. விடா முயற்சி எதையும் வென்றுவிடுகிறது. இயற்கையைக் கூட வென்றுவிடுகிறது - ஜே.டி.ரொக்பெல்லர்
17. திரும்ப திரும்ப எதைச் செய்கிறோமோ அதுதான் நாம். உன்னதம் என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம் - அரிஸ்டாட்டில்
18. பெரிய சாதனைகள் பலத்தால் அல்ல, தொடர்ந்து முயற்சிப்பதனாலேயே நிகழுகின்றன. - சாமுவேல் ஜான்சன்.
19. வாழ்க்கையின் துயரம் இலக்கை அடையாமல் சிரமப்படுவது அல்ல, இலக்கே இல்லாமல் இருப்பதுதான் - பென்சமின்
20. உங்களது உயர்வான இலக்குகளை சிறுமைப்படுத்துவோரிடமிருந்து விலகியே நில்லுங்கள் - மார்க் ட்வைன்.
21. உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள் உங்கள் உலகமே மாறிவிடும். - தாமஸ் வின்ஸ்டன் பீலே
22. எனது வலிமை எனது விடாப்பிடியான பண்பில்தான் தங்கியுள்ளது - லூயி பாஸ்டர்.
23. சுவர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சுவர்க்கமாகவும் மாற்ற மனதால் முடியும் - மில்டன்
24. எப்போதுமே வாய்ப்புக்கள் மீதும் சவால்கள் மீதும் உங்கள் கவனத்தை குவியுங்கள். பிரச்சனைகள் தோல்விகள் என்று நீங்கள் கருதுபவற்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்காதீர்கள் - வால்டர் டோயல் ஸ்டேபிள்
25. உற்சாகத்தை இழந்து விடாமலே ஒரு தோல்வியில் இருந்து மற்றொரு தோல்விக்கு செல்வதுதான் வெற்றி - வின்ஸ்டன் சேர்ச்சில்.

பணமும்..! குணமும்...!!

மனிதனிடமிருந்து
பணத்தைப் பிரிப்பது குணம்
குணத்தைப் பிரிப்பது பணம்;

உலகில்
மதங்கள் ஆயிரம்
ஜாதிகள் கோடியென உலவினும்
சமுதாயத்தில் மனிதன்
ஏழை பணமுடையான் எனும்
இருவகையில் தான்
பார்க்கப்படுகிறான்
பிரிக்கப்படுகிறான்;

தன் இருப்பிடத்தில்
மகிழ்வையும் மதிப்பையும் கொடுப்பதன்றி
வேற்றொரு குணமில்லை பணத்திற்கு
அதைக் கொண்ட மனிதன் தான்
தீ வைத்துத்கொள்கிறான்
தன் குணத்திற்கு;

இரத்தச் சொந்தங்கள்
பால்ய நண்பர்கள்
யாவரும் விலகிடுவர்
பணம் கொண்ட நேரத்தில்
ஆணவம் கொண்ட மனிதனை விட்டு ;

பணம்
சில மனிதரின் மனதை
கொடை உள்ளமாய் மாற்றுகிறது
பல மனிதரின் மனதில்
கோடையாய் அவர் குணத்தை
வற்றவைக்கிறது;

பொதுநலவாதி கூட
சுயநலவியாதி பிடித்து அலைவார்
பணத்தை அவர் துணையாக்கும்போது

பணம் மாற்றுகிறதா குணத்தை?
இல்லை
குணம் மாறுகிறதா பணத்தால்?
இவ்விடை தெரியா வினவுகள்
உலகில் உலவுகின்றன
இன்றும் கொடை மன மனிதர்கள்
சில‌ர் வாழ்ந்து கொண்டிருப்பதால்!

உலகில் யாரும் தினம்
பார்க்க போவதில்லை பணம்
மனிதருக்கு மிக முக்கியம்
நல்ல குணத்தோடு ஓர் மனம்!

- க‌வித்தோழன் -

Saturday, September 19, 2009

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்....!!


இறைவன் மிகப் பெரியவன்!

நம்மை படைத்தான்
பின் நமக்காக உலகை வடிவமைத்தான்;

உயிர் கொடுத்தான்
அதற்கு உடல் கொடுத்தான்
பின் உணர்வையும் கொடுத்து
நம்மை மனிதன் ஆக்கினான்;

தனிமையில் நாம் தவிக்காதிருக்க
சொந்தங்கள் கொடுத்து
பலம் ஊட்டினான்;

மிருகமாய் நாம் வாழாதிருக்க
அறிவை கொடுத்து மெருகூற்றினான்;

இத்துனையும் இதற்குமேலும்
நாம் கேட்டும் கேட்கமாலும்
கொடுக்கும் அவன்
நமக்கு கொடுத்த
கட்டாய கடமைகளிலொன்று
நோன்பு;

நோன்பென்பது
உணவின் அருமைத்தெரிய பசித்திருந்தும்
இச்சைகளிலிருந்து விலகி தனித்திருந்தும்
இறைவனை தொழுவதற்கு விழித்திருந்தும்
நற்பண்புகள் கற்றுத் தரும் செயல்;

முப்பது நாட்களில் மட்டும்
மனதில் அடக்கமாய்
குணத்தில் அமைதியாய்
வாழும் நாம்
வருடம் முழுவதும்
அப்படி வாழ முயற்சித்தால்
உலகெங்கும் அதர்மங்கள் குறையுமல்லவா?

இதோ!
இவ்வருடத்தின்
புனித மாதம் முடிந்தது;
நாளை நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
நம் மனதில் எங்கும் உற்சாகம்;

நாளை முடிந்து போய்விடில்
தேவையன்றி தேவையில்லை
தேவன் நமக்கு!

இனி வரும் காலங்கள்
நம் மனதின் போக்கை
மாற்றட்டும்;

இறைக்கு நன்றி சொல்லவும்
அவனை தொழுது நன்மை பெறவும்
நம் மனம் நாடட்டும்;

அவனும் அவன் நபியும்
சொன்ன வழியில்
நம் வாழ்க்கை மாறட்டும்;

அவனருள் பெற்று
நமக்கு மறுமையில்
சுவர்க்கம் சொந்தமாகட்டும் என
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
என்னுடைய ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களை
உங்களுக்கு சமர்பிக்கிறேன்.
- நட்புடன்......கவித்தோழன்(ஷேக் இப்ராஹிம்)